Wednesday, February 13, 2019

நோயைக் கண்டறியும் கணினி ப்ரோகிராம்!

ஒரு கணினி அல்லது ஒரு ரோபோ நமக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று கண்டறிந்து சொல்லக்கூடும் என்று சொன்னால், உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். இது சாத்தியம் தான்.


"என்னப்பா இது? வழக்கமா டாக்டர் ஸ்டெதஸ்கோப் வச்சு பார்ப்பாரு, கண்ணு, காது, மூக்குல லாம் டார்ச் அடிச்சு ஏதும் இருக்கான்னு செக் பண்ணுவாரு, என்ன சாப்டீங்க, எங்கெல்லாம் போனீங்க அப்டின்னு கேள்விலாம் கேப்பாரு. சில சமயம் எக்ஸ்ரே ஸ்கேன் எல்லாம் எடுத்து தான் என்ன எதுன்னே சொல்லுவாரு. இவ்வளவு வேலையையும் ஒரு மெஷின் கிட்ட குடுக்க போறீங்களா? டாக்டர் போடுற ஊசியை பார்த்து பயந்தே குழந்தைங்கல்லாம் ஆஸ்பத்திரிக்கு வரமாட்டேன்னு ஆடம் பிடிக்கும்ங்க. இதுல மெஷின்லாம் வந்து ஊசி போட்டா என்ன ஆகும்?" என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆனால் நாம் பயம் கொள்ளத்தேவையில்லை. மருத்துவத்துறையில் உண்மையில் ஒரு கணினி அல்லது ரோபோ மனிதர்களுக்கு வரும் நோயைக் கண்டுபிடிக்க முயன்றாலும், அதை மேற்பார்வை பார்ப்பது மனிதர்களாகத்தான் இருக்கும். சரி இப்போது ஒரு கணினி அல்லது ரோபோ எப்படி நோயைக் கண்டுபிடிக்க முடியும் என்று பார்க்கலாம்.

நாம் வழக்கமாக ஊரில் இருக்கும் ஒரு சாதாரணமான மருத்துவரிடம் தான் போய் பரிசோதனை செய்துகொள்வோம். தேவைப்பட்டால் அல்லது நோயின் தீவிரத்தைப் பொறுத்து பெரிய மருத்துவமனைகளை நாடுவோம். மருத்துவர் உடலைப் பரிசோதித்தபின் மருந்துச் சீட்டு எழுதித் தருவார். நாமும் மருந்துச்சீட்டை வைத்து மருந்துகளை வாங்கி உபயோகிக்க ஆரம்பிப்போம். சில நாட்களில் அந்த மருந்துச்சீட்டை தூக்கி எறிந்துவிடலாம் அல்லது மருந்துச்சீட்டு தானாகவே கிழிந்து, அழிந்து போகலாம். மருத்துவரோ அல்லது நாமோ, பாதிக்கப்பட்டவரின் உயரம், எடை, வயது போன்ற தகவல்களையோ, அல்லது பாதிக்கப்பட்ட நோய், அதற்கான மருந்து, மருந்தின் அளவு, எந்தெந்த வேளைகளுக்கு எந்தெந்த மருந்து உண்ணவேண்டும் போன்ற தகவல்களைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைப்பதில்லை. அதிகபட்சம் நாம் சேமித்து வைத்திருப்பது அதிக செலவில் எடுக்கப்பட்ட ஸ்கேன், எக்ஸ்ரே அல்லது பாதுகாத்து வைத்திருவேண்டும் என்று டாக்டரோ நண்பர்களோ சொல்லும் மருத்துவக் குறிப்புகள் மட்டுமே. "அது சரி. இதையெல்லாம் பத்திரமா சேர்த்து வச்சு நாம என்னப்பா பண்ணப்போறோம்?" என்று கேட்கலாம். ஆனால் இதைப்போன்ற தகவல்களைத் தரவுகளாகப் (Data) பயன்படுத்தும்போது அதன் மூலம் சில நல்ல பயன்களைப் பெறமுடியும் என இன்றைய விஞ்ஞானம் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.


அமெரிக்கா, லண்டன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் மேற்கூறிய தகவல்களை ஒவ்வொரு நோயாளியிடமிருந்தும் பெற்று, அதைச் சேகரித்து வைத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, ஒரு நாளைக்கு ஒரு மருத்துவமனைக்கு 100  நோயாளிகள் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால் ஒரு மாத காலத்தில் மொத்தம் மூவாயிரம் பேர் அந்த மருத்துவமனைக்கு வந்து சென்றிருக்கக்கூடும். இதைப்போல் அந்த நகரில் உள்ள மொத்த மருத்துவமனைகளும் சேகரிக்க ஆரம்பித்தால் ஒரே மாதத்தில் பல்லாயிரம் நோயாளிகளின் தகவல்களை எளிதில் சேகரிக்கலாம். ஆனால், இப்படி சேகரிப்பதால் என்ன பயன் என்று தோன்றுகிறதா? ஆனால் பயன் இருக்கிறது.

உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நாம் நோயாளிகளின் தகவல்களை சேகரிப்பதாக வைத்துக்கொள்ளலாம். இந்த நோயாளிகளின் தகவல்களை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவலாக எந்த மாதிரியான நோய்கள் வருகின்றன? எந்த மாதங்களில் அவை அதிகமாகப் பரவுகின்றன? யார் முதலில் அந்த நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் (வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் இது போல்)? ஏதாவது ஒரு மாவட்டத்தில் அல்லது ஊரில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் நல்ல பலனைத் தருகின்றனவா? அடுத்த வருடம் இந்த நோய் பரவும் போது நல்ல பலனைத் தரும் மருந்துகளை அரசே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பரிந்துரைக்கலாமா? அடுத்த வருடம் இந்த நோய் வரமால் இருக்க ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியுமா என்பது போன்ற பல வித கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளலாம். இதைப்போல், எந்த நோய்கள் எந்த மாதிரியான நிலப் பரப்புகளில் அதிகம் பரவுகின்றன, அதற்கான சுற்றுச்சூழல் காரணிகள் என்ன என்பது போன்ற கோணங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு நம்மைக் காத்துக்கொள்ளலாம். மேலும் பல நல்ல வழிகளும் இந்தத் தகவல்களை உபயோகப்படுத்தலாம். ஆனால் ஒரு நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் அனுதினமும் வந்துபோகும் கோடான கோடி நோயாளிகளின் தகவல்களை எப்படி சேகரித்து எப்படி அலசி ஆராய்வது? மனிதர்களால்  முடிகின்ற காரியமா இது என்று மலைப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் தகவல் தொழில்நுட்பத்தால் இது சாத்தியம். கணினியை வைத்து இந்த அசாத்திய செயலை எப்படி செய்ய முடிகிறது என்று பார்ப்போம் வாருங்கள்.



கணினித் துறையில் இருப்பவர்கள் மத்தியில் பரவலாக பிரபலமாக இருக்கும் ஒரு பெயர் பிக் டேட்டா (Big Data). நான் மேலே கூறியது போல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்களின் நோயைப் பற்றிய சேகரித்து வைக்கப்பட்ட தகவல்களை, இந்த பிக் டேட்டா தொழில்நுட்பம் கொண்டு ஆய்வு செய்கிறார்கள். பிக் டேட்டா தொழில் நுட்பம் கொண்டு ஒரு நொடியில் நூற்றுக்கணக்கான தகவல்களை ஆய்வு செய்ய, சரி பார்க்க முடியும். இத்தகைய தொழில்நுட்பம் கொண்டு தான் நிதமும் பல லட்சக்கணக்கான தகவல்களை ஆய்வு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு ஊரில் கிடைக்கும் மொத்த பயனாளர்களின் தகவல்களை இந்த பிக் டேட்டா தொழில்நுட்பம் கொண்டு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஆய்ந்து நமக்கு வேண்டிய தகவல்களைக் கண்டறிய முடியும்! இந்தப் பதிவை எழுதும் இன்றைய நாளில், சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு பத்துலட்சம் தரவுகளை (Data) பிக் டேட்டா தொழில்நுட்பத்தால் ஆராய முடியும் என்றால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! பிக் டேட்டா போல இன்னும் சில தொழில்நுட்பங்களும் புழக்கத்தில் உள்ளன!



ஒவ்வொரு செயலையும் மெருகேற்ற மெருகேற்ற அதன் மதிப்பு கூடிவிடுகிறது. அதைப்போலத்தான் இந்த பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை அடுத்த கட்டத்திற்கு இப்போது அறிவியலாளர்கள் எடுத்துச் செல்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence மூலமாக மனிதர்களைப் போல சிந்திக்கும் திறனை உடைய கணினி புரோகிராம்களை அறிவியல் வல்லுநர்கள் வடிவமைத்து வருகின்றனர். இதன் மூலம், உலகில் சேகரிக்கப்படும் அளவில்லாத தகவல்களை ஆராய்ந்து, அந்த ஆய்வின் முடிவின் பேரில் நோய் இன்னதாக இருக்கக்கூடும் என மருத்துவர்களுக்குப் பரிந்துரைக்கும்படி இந்தக் கணினி புரோகிராம்களை உருவாக்கியுள்ளனர். இதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த Artificial Intelligence புரோகிராம்கள் தற்போது சிறுவயதில் ஏற்படும் நோய்களை, மருத்துவர்கள் கண்டறியும் அளவு துல்லியத்தோடு கண்டுபிடிக்கத் துவங்கியிருக்கின்றன. இவை இன்னும் மெருகேற்றப்படும்போது கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களை நோயின் துவக்கத்திலேயே கண்டறியும் சத்தியம் ஏற்படலாம்! இதன் மூலம் மனித குலத்திற்குப் பல நன்மைகள் விழையக் கூடும். ஒரு வேளை, இந்தச் சாதனையை நிகழ்த்தப் போகிறவர்கள் இன்று கணினி பயிலும், கணினித் துறையில் வேலை புரியும் நம் சகோதர சகோதரிகளாகவோ, பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம். முயன்றால் எதுவும் சாத்தியம் தானே :)

குறிப்பு: Artificial Intelligence ஒரு வளர்ந்து வரும் துறை. இதன் மூலம் நன்மை மட்டுமே விளையும் என்று இப்போதே உறுதி கூற முடியாது. எல்லா தொழில்நுட்பங்கள் போலவும், Artificial Intelligence தொழில்நுட்பத்திலும் நன்மை தீமை கலந்தே இருக்கும். அன்னம் பாலை நீரிலிருந்து பிரிப்பது போல், நன்மையைத் தனியே பிரித்தெடுத்து மற்றவர்களுக் தருவதில் மனித சமூகத்தின் வெற்றி இருக்கிறது.

-செல்லா

No comments:

Post a Comment

தன்னைத் தானே சார்ஜ் ஏற்றும் பேஸ்மேக்கர்!

ஒரு கருவியால் உங்களின் இதயத் துடிப்பை சீராக்க முடியும், ஏன் உங்கள் உயிரையே காப்பாற்ற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்மால் நம்ப...