Monday, February 11, 2019

ஆறாம் பேரழிவு!

இதுவரை உலகம் ஐந்து பேரழிவுகளைக் கடந்து வந்துள்ளது. ஆங்கிலத்தில் இதை மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் (Mass Extinction) என அழைக்கிறார்கள்.


(இந்த ஐந்து பேரழிவுகளைப் பற்றியும் இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்)

இவற்றை மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் என்று கூறக் காரணம், மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பேரழிவும் உலகில் உள்ள பெரும்பாலான உயிரினங்களை அழித்திருக்கிறது. கிட்டத்தட்ட 70 சதவீத உயிரினங்களுக்கு மேல்! உலகில் பலருக்குப் பிடித்த அழிந்த உயிரினமான டைனோசரும் ஒரு பேரழிவில் (ட்ரையாசிக்-ஜுராசிக் பேரழிவு) காணாமல் போனவைதான். ஆனால் இவையெல்லாம் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு இயற்கைக் சூழ்நிலைகளில் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த பேரழிவுகள். இப்போது, இந்த ஐந்து பேரழிவுகளைத் தவிர ஆறாவது பேரழிவு ஒன்றும் இருக்கிறது. அது ஹோலேசேன் பேரழிவு. இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இந்த ஆறாம் பேரழிவு இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதுவும் நம் கண்முன்னே!



"என்னப்பா விளையாடுற? பேரழிவாவது ஒண்ணாவது, எல்லாரும் நல்லாத்தானே இருக்கோம்? அப்படி என்ன விண்கல்லா விழுந்துருச்சு? ஏன் பேரழிவு அது இதுன்னு சொல்ற?" என நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உண்மையிலேயே ஹோலேசேன் பேரழிவு தற்போது நம் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட, பல நூறு உயிரினங்கள், ஏன் பல ஆயிரம் உயிரினங்கள், இறந்துகொண்டுதான் இருக்கிறன்றன. அதுவும் தினம் தினம்!

"என்ன? ஆயிரமாயிரம் உயிரினம் இருக்குதா? அப்போ ஏன் எங்களுக்கு எதுவுமே தெரியல? ஏன் ஒரு நியூஸ் சேனல் கூட இத பத்தி பேசல? ஒரு பேஸ்புக் பதிவு கூட பாக்கலையே?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. எதிர்பாராதவிதமாக, இறந்துகொண்டிருப்பது மனிதர்கள் அல்ல. மாறாக பூச்சிகள். ஒரு பூச்சிக்கா இவ்வளவு பெரிய பேச்சு என்று தோன்றினால், நினைவிருக்கட்டும், அறிவியல் அறிஞர்கள் இதை மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் என்று அழைப்பது ஒரு பேரழிவுக்கான அறிகுறியாக பூச்சிகளின் அழிவு இருப்பதால் தான்.



உலகில் உள்ள மொத்த பூச்சியினங்களில் 50% க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து வருகின்றன. அதிலும் மூன்றில் ஒரு பங்கு பூச்சியினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் 2.5% பூச்சிகளின் மொத்த எண்ணிக்கை அழிந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த உலகில் உள்ள மொத்த பூச்சியினங்களும் அழிவைச் சந்திக்க நேரிடும். இது சுற்றுச்சூழலுக்கும், மனித இனத்தின் வாழ்வுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!

ஆஸ்திரேலியாவின் யூனிவர்சிட்டி ஆஃப் சிட்னி பல்கழகத்தைச் சேர்ந்த சான்செக் - பேயோ மற்றும், பெய்ஜிங்கின் சீனா அகாடெமி ஆஃப் அக்ரிகல்ச்சர் பல்கழகத்தைச் சேர்ந்த க்றிஸ் ஆகியோர் இணைந்து அளித்த இந்த சமீபத்திய ஆய்வறிக்கை இந்த அபாயகர அறிக்கையை உலகத்துக்கு அளித்துள்ளது. அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.



"உலகில் நாம் நினைப்பதை விட பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உணவாகவும், பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடக்கவும், இறந்த பழங்கள், உயிரினங்களை முழுவதுமாக அழிப்பதிலும், பூச்சிகளின் பங்கு முக்கியமானது. உலகில் உள்ள மொத்த மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் எடையை விட 17 மடங்கு அதிகம் இருப்பவை பூச்சியினங்கள். அவ்வளவு எண்ணிக்கையில் உள்ள பூச்சியினங்கள் இன்னும் 100 வருட காலங்களில் அழிந்துவிடும் என்பது மிக அபாயகரமான ஒன்று!"

உலக அளவில் பூச்சியினங்கள் எவ்வளவு தூரம் அழிந்து வருகின்றன என்று துல்லியமாகக் கண்டறிய, இந்தக் குழு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் இருந்து சீனா வரையுள்ள சில பகுதிகள், பிரேசிலில் இருந்து ஆப்பிரிக்க வரை உள்ள சில பகுதிகள் மற்றும் இன்னும் சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. இக்குழுவின் ஆய்வு முடிவுகள் அவர்கள் எண்ணியபடி மகிழ்ச்சிகரமான ஒன்றாக இல்லை.

லெபிடோபெட்ரா (வண்ணத்துப்பூச்சி), ஹைமெனோப்டெரா (ஈ),  கோலியோப்டெரா (பீட்டில் எனப்படும் வண்டுகள்) ஆகிய குடும்பத்தைச் சேர்ந்த பூச்சியினங்கள் தான் அதிகமாக அழிந்துவரும் பூச்சியினங்கள். குறிப்பாக 2000 லிருந்து 2008 வரை இங்கிலாந்தில் உள்ள வண்ணத்துப்பூச்சியினங்களில் 58% வரை அழிந்து போயிருக்கின்றன. தேனீக்களும் அழிவில் இருக்கின்றன. 1947 ல் அமெரிக்காவில் 60 லட்சம் வரை இருந்த தேனீக்கள், தற்போது 35 லட்சமாகக் குறைந்துள்ளன. வண்டுகளும் அழித்துக்கொண்டு வருகின்றன. (இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இதை விட மோசமாக இருக்கக்கூடும்).

பெரும்பாலான பூச்சியினங்கள் அழித்துக்கொண்டு வந்தாலும், தகவல்கள் சேகரிப்பில் உள்ள கடினம் காரணமாக எல்லா பூச்சியினங்களும் அழிந்துகொண்டுதான் வருகின்றன என்று கூற இயலவில்லை. சில பூச்சியினங்கள், குறிப்பாக பம்பிள் பீ (Bumble Bee) எனப்படும் தேனீக்கள் பூச்சிமருந்துகளைத் தாங்கியும், பிற போட்டி தேனீக்கள் இல்லாததாலும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது. இருப்பினும் இது கண்டிப்பாக அதிகரிக்கிறது என்று அறுதியிட்டுக்கூற போதிய தகவல்கள் இல்லை. மேலும், சில பூச்சியினங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதால், மற்ற பூச்சியினங்கள் அழிவுகள் ஈடுகட்டப்படும் என்றில்லை.

இங்கிலாந்து இந்த பூச்சியினங்கள் அழிவை பெரிய அளவில் சந்தித்தாக நம்பப்படுகிறது. அதே போல் பியூடோரிகோவில் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 98% பூச்சியினங்கள் அழிந்துள்ளன. இவை நாம் எளிதில் கடந்து போய்விடக்கூடிய அளவுக்கு சாதாரணமான அழிவுகள் அல்ல.

அதிகப்படியான பூச்சிமருந்து உபயோகங்களும், அதிக அளவிலான நகரமயமாக்கலும், புவித்தட்பவெப்பநிலை மாறுபாடும் பூச்சிகளின் அழிவில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை பூச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு உறைவிடத்தையும் அழிக்கின்றன என்று சான்செக் - பேயோவின் ஆய்வறிக்கை கூறுகிறது. "அதிக பூச்சிமருந்து உபயோகம் இல்லாத, இயற்கைவழி விவசாய முறைகளையும், நகரமயமாதலைக் கட்டுப்படுத்துவதையும், புவி வெப்பமயமாவதைக் குறைப்பதையும் தான் பூச்சிகளின் அழிவைக் கட்டுப்படுத்த இருக்கும் வழிமுறைகள். பூச்சிகள் இயற்கையில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பூக்கள் கனியாவதிலும், இறந்த உயிரினங்களை மக்கச் செய்வதிலும், தேன் போன்ற பொருட்களின் உருவாக்கத்திற்கும் பூச்சிகள் காரணமாக இருக்கின்றன. மேலும், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, மற்றும் தவளையினங்கள் போன்ற உயிரினங்கள் பூச்சிகளைத் தான் உணவாய் உண்டு வாழ்கின்றன. பூச்சிகளின் அழிவு, அவற்றைச் சார்ந்திருக்கும் தாவர, விலங்கினங்களின் அழிவுக்கும் வித்திடும்" என்கின்றனர் சான்செக் - பேயோ. 

மக்களுக்கு இந்த அழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியமாகிறது. கடந்த 25 முதல் 30 ஆண்டுகளில் 80% பூச்சியினங்கள் அழிந்துவிட்டன என்பது மிகப்பெரிய அபாயம். குறிப்பாக, 5 மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் என்னும் உலகப்பேரழிவுகளைக் கடந்து வந்த பூச்சியினங்கள், சில வருடங்களில், மனிதர்களின் தலையீட்டால் அழிந்து வருவது என்பது நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து. இந்த அழிவைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இதன் பாதிப்பு மனிதர்களுக்கும் மற்றும் உலகிற்கும் மிக அதிகம்.

- செல்லா

No comments:

Post a Comment

தன்னைத் தானே சார்ஜ் ஏற்றும் பேஸ்மேக்கர்!

ஒரு கருவியால் உங்களின் இதயத் துடிப்பை சீராக்க முடியும், ஏன் உங்கள் உயிரையே காப்பாற்ற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்மால் நம்ப...